Saturday, March 26, 2011

வசந்த காலம்....

பள்ளி மணியடித்தும் பிரிய மனதில்லாமல்
ஊர்ந்து ஊர்ந்து திரும்பும் நத்தை வேகம்

மொட்டை மாடியில் கூட்டுப் படிப்பு
வாரக் கடைசியில் கூட்டாஞ்சோறு

தாவணிக்கு பின் தானம் தந்து
பின் திருப்பிக் கேட்டதில் செல்லக் கோபம்

அம்மா கட்டிய புளியோதரை
இரண்டு பங்காய் அவளுக்கும் சேர்த்து

திகட்டத் திகட்டப் பேசிச் சிரித்தும்
வழியனுப்ப வந்து வாராவதியிலும்
திகட்டாமல் தொடர்ந்த சில மணி நேரம்

காரணமற்றே பொங்கிய
சிரிப்பின் ஒலிகள்
காரணமின்றியே போட்ட
சண்டையின் வலிகள்

படிக்க மறந்தும் டிசம்பர் பூ
வாங்க ஓடிய மார்கழி விடியல்கள்

சித்திரை வெய்யிலிலும்
ரைட்டோ கொய்ட்டா
ஆடிய நாட்கள்

புத்தகத்தின் நடுவே மயிலறகு வளர்த்து
குட்டியைத் தேடிய குழந்தைத் தனங்கள்

பிறந்த நாள் பரிசாய்
கொலுசு மணி கொடுத்து
பத்திரமாய் வச்சுருக்கியா? என‌
வருடம் முழுதும் சோதித்த
அன்புத் தொல்லைகள்

நட்பாய் கிடைத்து நட்பில் கிடைத்து
நட்புடன் கிடைத்த
வருடம் முழுதும் என் வசந்த காலம்

இன்றும் தொடர்கிறது என் மகளின் மூலம்....

No comments: