Saturday, September 10, 2011

தங்கைக்கோர் கவிதை....




















என் பிறந்த நாளுக்காக என் தங்கை எழுதிய இக் கவிதைக்கு,

உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....

என் உறவாய் மலர்ந்த உடன்பிறப்பவள்
என் உயிரின் மறுபிறப்பவள்....

மலரிதழில் மழைத்துளியாய்
என்னை மண்ணில் விழாமல் காப்பவள்...

பூவாசம் முள்ளிற்கும் ஒட்டிக்கொள்வதுண்டு
எனக்காக முள்ளாய் சில நேரம் நீ மாறியதுமுண்டு....

விழியோரம் வழிந்திடும் கண்ணீரும் உன்னால்
அன்பின் மழையாய், மகிழ்ச்சியின் சாரலாய் கரைந்ததுண்டு

நீ நீறு பூத்த நெருப்பாய் நிலைத்திருக்கின்றாய்
உன் கதகதப்பில் என்றும் நான் குளிர்காய்வதற்கு....

கைக்கெட்டிய தூரத்தில் வானவில்
நாம் கைகோர்த்த நேரத்தில் சிரிக்கும்....

இனியும் நினைவில் வைப்பதற்கு நிறைய நிஜங்கள்
காத்திருக்கின்றன...
வாழ்நாள் போதாது உன் நிழலாய் நான் தொடர்வதற்கு.

****************************************

பதிலாக நான் எழுதிய வரிகள் இதோ...



தங்கைக்கோர் கவிதை....


கண் வாசிக்கும் முன்னே என்
கண்ணீர் வாசிக்க
தளும்புதே கண்ணே...

வரிகளில் பாசம் நிரப்பி
அன்பெனும் வாசம் பரப்பி
வாழ்த்துப் பா படைத்திட்டாய்

வார்த்தையில்லை என்னிடத்து
மூழ்கி நிற்கிறேன் உன் அன்பிடத்து

பெற்றதினால் தாயானது பின்னாள்
பெறாமலே தாயானது உன்னால்

எத்தனைப் பெற்றாலும்
என் முதற்பிள்ளை நீ
என் பிள்ளைக்கும்
தாய்ப்பாசம் தந்தவள் நீ

கவிதை தந்தாய் என்
பிறந்தநாள் பரிசாக
கடவுள் தந்தார் உனை
என் பிறப்புக்கும் பரிசாக...

No comments: